கண்ணாடி
உள்ளடக்கம்
இந்தக் கவிதை மனிதன் தன் உணர்வுகளை யாரிடமும் வெளிப்படுத்த முடியாத தருணங்களில் தீர்ப்பின்றி, கேள்வியின்றி, மௌனமாக உடன் நிற்கும் கண்ணாடியை ஒரு நெருங்கிய தோழியாகப் பார்க்கிறது.
கண்ணீர், இன்பம், அழகு, கண்ணியம், ரகசியம்-
அனைத்தையும் அனுமதி கேட்டே ஏற்றுக் கொள்ளும் அந்த மௌன சாட்சி தனிமையின் பாதுகாப்பையும், சுயமரியாதையின் எல்லையையும் மென்மையாக வெளிப்படுத்துகிறது.
கவிதை
எதிர்மறை எண்ணங்கள் மெல்லிய மனதை சலசலக்க,
இமைகளை நீராட்டி வெளிவந்த நினைவு கரைசலை,
கையால் துடைத்த என்னை
யாரும் கவனிக்க மறுத்ததால் அமைதியுற்றேன் - ஆனால் அவள் கவனித்தாள்.
உதட்டின் காவலை மீறி
வெளிவந்த முத்துக்கள்-
சிதறாமல் உள்வாங்கிய
மெல்லிய உணர்வை யாரிடமும் பகிராமல் இன்புற்றேன் - அதை அவள் உணர்ந்தாள்
முல்லை மொட்டுக்கள்
விரிந்தும் விரியாமலும்
என் கூந்தலில் வீற்றிருந்த
அழகை சரிபார்க்க
அவள் இசைந்தாள்.
ஆடைகள் தன்நெறி மாறாமல் கண்ணியத்துடன் ஒத்துழைக்க
அவள் காவலானாள்.
இரவு பகல் பாராமல் எனக்காக விழித்திருந்து நான் கேட்டதை,
நான் பார்த்ததை,
நான் உணர்ந்ததை அப்பழுக்கில்லாமல் எனக்குத் தந்த
என் தோழி....
விழிகளில் ஒளிந்திருக்கும்
என் இரகசியத்தை என் அனுமதியின்றி திறக்காதே.
நாட்குறிப்பு
மனது திறக்கும் வார்த்தைகளும், விழிகள் இமைக்கும் காட்சி்களும்
தடையின்றி பகிர நம்பிக்கை எப்போதும் சுற்றம் சேர்வதில்லை. இருளிலும் கைக்கோர்த்து, திடமாய் ஏற்றுக்கொள்ளும் நிஜம், ஆராயும் தருணத்தில் என் முன் என் பிம்பமாய் எனக்கே என்னை கற்றுத் தந்த உயிரற்ற நம்பிக்கை, நான் உயிர் மகிழ என் முன் கவசமாய் வழிவகுத்த என் தோழி, உன்னைக் காட்டிலும் வேறு துணை ஏற்க கலங்கினேன். அதிலும் நீயே என் கலக்கம் தீர்த்தாய்.
Wonderful
பதிலளிநீக்குWell do e
நீக்கு