வறுமை
உள்ளடக்கம்
இந்தக் கவிதை, வறுமையை ஒரு பொருளாதார நிலையாக அல்லாமல், மனித உடல், உயிர், சுவாசம், காலம் மற்றும் சமூக அடுக்குகள் அனைத்தையும் ஆக்கிரமிக்கும் முழுமையான அனுபவமாகப் பதிவு செய்கிறது. வாய்ப்புகள் இருந்தும் அனுமதி மறுக்கப்படும் சமூக வாசல்கள், அடிப்படை தேவைகளே அடைப்பாக மாறும் வாழ்வியல் சூழல், உயிர் காக்க வேண்டிய ஆதிமூல சக்திகள் உயிர் கெடுக்கும் பசியாக உருமாறும் நிலை ஆகியவை இதில் தீவிரமாக வெளிப்படுகின்றன. இறுதியில் மண்ணுக்குள் புதைந்திருக்கும் கம்பீரம் மேல்தளத்தை அசைக்க முனைவது மூலம், ஒடுக்கப்பட்ட வாழ்வின் அடக்கமில்லாத எதிர்ப்பும் மறைந்த வலிமையும் உணர்த்தப்படுகிறது.
கவிதை
முழுமை பெற்ற அடித்தளங்கள்
காற்றில் பயணிக்க
தேர்ந்தெடுக்கப்படாதவை-
நிறைவாகிய வாசல்
வரவேற்கவும் அனுமதி இல்லாதவை.
வறுமையின் பிடியில்-
செந்நீர் ஊற்று
ஊடுருவ மறுக்கும்,
வெள்ளைக் கூட்டின்
நகலாய் படர்ந்திருக்கும்
மேலாடை சுருக்கமும்
விரிவடைய மறுக்கும்,
ஆதி மனிதனின் உயிர் வளர்த்த
நெருப்பு, பசியாய் உருவெடுத்து
உயிர் கெடுக்க இசையும்,
உடல் சுமக்கும் பாதங்களும்,
தடம் காணும் கைகளும் பாரமென
மண்ணில் இளைப்பாற நினைக்கும்,
விழித்திரை காட்சி மறுக்கும்,
சுவாசத்தின் துவாரம்
காற்றின் விசை மறுக்கும்,
உணவு செரிக்கும் உமிழ் நீர்
உறைவிடம் செரிக்கும்.
வெறுமையின் தாக்கத்தில்,
வலிமை இழந்த
விரல்கள் வலுப்பெறும்,
காலச்சுழற்சி முழுமைப்பெறும்.
மண்ணுக்குள் புதைப்பட்ட
கம்பீரம்
மேல் தளத்தை அசைத்துப் பார்க்கும்.......
பிரமாதம்.
பதிலளிநீக்குWonderful
பதிலளிநீக்கு