அழகியல்

உள்ளடக்கம்

இந்தக் கவிதை, அழகு என்பதைக் காட்சியழகாக மட்டும் அல்லாமல், இயற்கை, மனித உணர்வு, பண்பு, மொழி, சமூகநிஜம் ஆகிய அனைத்திலும் பரவியிருக்கும் ஒரு ஆழ்ந்த அனுபவமாக வெளிப்படுத்துகிறது. வானிலிருந்து விதை வரை, மழையிலிருந்து முதுமை வரை, வறுமையிலிருந்து கருணை வரை-
எதிர்மறை, நேர்மறை இரண்டிலும் ஒளிந்திருக்கும் அழகை கவிதை நுணுக்கமாகச் சுட்டிக்காட்டுகிறது. இறுதியில், தமிழ் மொழியே அந்த அழகின் உச்சமாக உயர்கிறது.

நாட்குறிப்பு

அழகு உருவம் சார்ந்ததன்றி, உணர்வு சார்ந்தது. உணர்வுகள் வெளிப்படுத்தும் பிம்பங்கள் அனைத்தும் அழகானவை. விழி காணும் நிஜங்கள் மனம் சென்றடைவதில்லை. மனம் உணர்ந்த நிஜங்கள் விழி சேரும்போது அனைத்தும் அழகானவை.
வான் விரிந்த உலகில் வேரூன்றும் பசுமை குவியல்கள், அதனுள் அமர்ந்திருக்கும் வண்ண மலர்கள், கடல் பருகிய நீலம், என எண்ணற்றவை பூமியின் அழகோவியங்கள். 
" அழகு"  தமிழ் அகராதியின் முதல் உயிரும், முதல் மெய்யும் காவல் நின்று நாவில் " ழகரம்" சுழல்வதும் அழகு. கண்களின் திரை அகன்று உற்று நோக்கிய நிகழ்வுகள் அழகியலாய் உங்கள் பார்வைக்கு.......

கவிதை

வெண்கதிர் மறைத்த வானின்
பிறை அழகு,

முகில் பாய்ந்தோடும் நீலத்திரையில்
நட்சத்திரம் அழகு,

இறகு தொடுத்த பறவைக் கூட்டத்தின்
வரிசை அழகு,

கனி உதிர்த்த விதையின்
முளைகள் அழகு,

காற்று துளைத்த மூங்கிலின்
இன்னிசை அழகு,

முதுமை பின்நோக்கி அசைப்போடும்
மழலை அழகு,

பனி உறையும் வெங்காட்டின்
தீப்பொறி அழகு,

புதுமை தழுவிய நுற்றாண்டின்
பழங்கதை அழகு,

இமை சுமக்கும் விழியின்
கருணை அழகு,

நிலம் சுமக்கும் கோபுர பல்லக்கின்
கற்சிலை அழகு,

கண்டம் கடந்து தேசம் வளர்க்கும் 
பண்பாடு அழகு,

வேர்வை குளித்த நெல்மணியின்
குவியல்  அழகு,

பெண் மறைத்த உளவியல்,கண்டறிந்த
கவி அழகு,

இடை மெலிந்த பெண்ணின்
வறுமை அழகு,

அழகில் ழகரம் இசைத்த தமிழ்
அழகிற்கு அழகு.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உடமை

இயற்கை

நானும் அவளும்