இரு

உள்ளடக்கம்

இந்தக் கவிதை இயற்கை, மனித சமூகம், மனம், காலம் ஆகிய அனைத்திலும் இயல்பாக இனைந்து வாழும் இரட்டைத்தன்மைகளை(  இருள்- ஒளி, நன்மை- தீமை, அன்பு- பகை, பிறப்பு- இறப்பு) தத்துவ  ரீதியாக ஆராய்கிறது. எதிர்மறைகள் ஒன்றுக்கொன்று எதிராக அல்ல: ஒரே பயணத்தின் இணைநடப்பாளர்கள் என்ற பார்வையை முன் வைக்கிறது.
நொடிகள் ஓடிக்கொண்டே இருந்தாலும், அந்த ஓட்டத்திற்குள் மனிதன் தேடும் ஓய்வு, அர்த்தம், சமநிலை ஆகியவற்றை கவிதை சுட்டிக்காட்டுகிறது.

கவிதை

இயற்கையின் வசிப்பிடத்தில்
இரவும் பகலும்,
முகம்காட்டா விருந்தினர்கள்.

கதிரவனின் தாகம் தீர்க்கும்
அடர்ந்த கோப்பைக்குள்
இருளும் வெளிச்சமும்,
விண்வெளி சாயல்கள்.

இறைவன் காணும் நடைப்பாதையில்
நன்மையும் தீமையும்,
கைகோர்க்கும் வழிபோக்கர்கள்.

மனிதன் ஆளும் சமூகத்திற்குள்
அன்பும் பகையும்,
ஓயாமல் அசையும் ஊஞ்சல்கள்.

மதி வளர்த்த கணிதத்தில்
ஒன்றும் நூறும்,
துணை விரும்பா ஆற்றல்கள்.

வெளிச்சத்தில் கண்விழித்தும்,
இரவில் கண்ணசரும் பயணத்தில்
பிறப்பும் இறப்பும்,
சலிப்பில்லா மரபு சூழற்சிகள்.

மனம் புதைந்த உயிர் வட்டத்திற்குள்
இன்பமும் துன்பமும்,
வெற்றிடம் கண்காணிக்கும் உளவாளிகள்.

ஓய்வறியா நொடிகள்
வசிக்கும் மணித்துளிக்குள்-
ஓய்வு காணும் படிமங்கள்.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உடமை

இயற்கை

நானும் அவளும்