புதுமை

உள்ளடக்கம்

இந்தக் கவிதை, இயற்கையின் முரண்களில் மறைந்திருக்கும் அற்புதங்களை வெளிப்படுத்துகிறது. ஆழ்கடல்- அமைதி, பாலைவனம்- பசுமரம், மௌனம்- முழக்கம் போன்ற எதிர்மறை நிலைகளின் சங்கமம் மூலம் உயிர், உணர்வு, சுவாசம், தாகம் ஆகியவை ஒரே மேடையில் நிகழும் புதுமைகளாகக் காட்சியளிக்கின்றன.
மனிதன் மொழியால் வரையறுக்க முடியாத அழகுகள், இயற்கையின் அரங்கில் இயல்பாகவே அரங்கேறுகின்றன என்பதே கவிதையின் மைய உணர்வு.

கவிதை

ஆழ்கடல்    மிதக்கும்
அமைதி,

முழு நிலவில்
தும்பையின் பிரவேசம்,

ஓலையின் வரிசையில்
கண்சிமிட்டும் கதிர்கள்,

மௌனத்தின் துணைசேரும்
வெண்சங்கு முழக்கம்,

நீர் சுரக்கும் கருவறையில்
காற்றின் வெற்றிடம்,

பட்டின் இழை
தாங்கிய மேலாடை,

பாலையில் நீர்சுரக்கும்
பசுமரம்,

பனிகாட்டில் தத்தி நடக்கும்
உயிரோவியம்,

காற்றருவியில் சுவாசம்
பதித்த  மூலிகைகள்,

நேர்திசை மறவா
மழைத்துளி பயணம்,

மலர்கள் சுவைத்திடாத
தேன் விருந்து,

துகள் வென்ற வெப்பத்தின்
பெண் ஆபரணம்,

கடல் தணிக்காத
நன்னீர் தாகம்,

இலக்கில்லா வட்டத்துக்குள்
இரைதேடும் தீச்சுடர்,

நடுநிசையில்  துயிலுரியும்
மலரினம்,

எழுத்துக்களின் வரையரைக்குள்
தென்படாத அற்புதங்கள் யாவும்
இயற்கையின் மேடையில்
அரங்கேறிய புதுமைகள்.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உடமை

இயற்கை

நானும் அவளும்