முடிவுரை
உள்ளடக்கம்
இந்தக் கவிதை மனித வாழ்வின் ஆழமான வெற்றிடத்தையும், நிறைவேறாத ஏக்கத்தையும் வெளிப்படுத்துகிறது.காலம் நகர்ந்தும் வாழ்க்கையின் அர்த்தம் தெளிவாக தெரியாமல் போகும் ஓரு நிலையை இது காட்டுகிறது. வானம் விரிந்திருந்தாலும் அதன் எல்லை கண்களுக்கு எட்டாதது போல, மனிதன் தேடும் நிறைவு எளிதில் கிடைக்காததாகவே உள்ளது. மேகம் கரைந்து மழையாக விழுந்தாலும் மண்ணின் தாகம் தீராதது போல வாழ்க்கையில் நிகழ்வுகள் பல வந்தாலும் உள்ளத்தின் பசி அடங்காமல் தொடர்கிறது. வெளிப்படையாக இயற்கை இயக்கம் நடைப்பெறுகிறது போல தோன்றினாலும் உள்ளார்ந்த வெறுமை நீங்காத ஒரு அமைதியான வேதனை இந்தக் கவிதையின் மைய உணர்வாக உள்ளது. இது தனிமை, தேடல் மற்றும் நிறைவை நாடும் மனித மனத்தின் நிலையை நுட்பமாக பிரதிபலிக்கிறது.
கவிதை
முடிவுற்ற காலங்கள் விழித்திருந்தும்
வானின் நீளம் தென்படவில்லை.
மேகம் கரைந்த நீர்துளிகள் சிந்தியும்
மண்ணின் தாகம் தீர்க்கப்படவில்லை.
நிலம் இருகிய பாறைகள் குடைந்தும்
பூமியின் புதிர் விடுபடவில்லை.
பிறவிகள் ஏழு கடந்தும்
சூரியனின் கதிர்கள் குன்றியதில்லை.
நொடியின் இடையில்
இமை மூடும் விழிகள் கரைந்தாலும்
நட்சத்திரங்கள் மிதக்க மறந்ததில்லை.
யுகங்களாய் வளையத்திற்குள்
அகப்பட்ட காற்றுக்கு
ஒரு கணமும் ஓய்வறிய விதியில்லை.
நினைவுகளின் முன்னெடுப்பில்
முரண்களை மட்டும் கைக்கோர்த்து
உருவம் கலையும் போர்வைக்குள்,
நிலம் பதியும் பாதமும்
உரிமைக் கொள்ள முடியாமல்,
சுவாசம் மட்டும் நிரந்திரமாய்
காற்றோடு உறவாடும் மனிதனின்,
வாழ்வும் வளமும்
இயற்கையை பின்தள்ளி
புனையப்பட்ட வாழ்வியல்-
மேகம் கலையா
காற்றோவியங்கள்.

கருத்துகள்
கருத்துரையிடுக