முரண்
உள்ளடக்கம்
இந்தக் கவிதை மனிதன் தனது உடல், உணர்வு, காலம் மற்றும் உறவுகளுடன் எதிர்கொள்ளும் மாற்றங்களை அச்சமின்றி ஏற்றுக்கொள்ளும் மனநிலையை வெளிப்படுத்துகிறது. உயர்வு- தாழ்வு, இளமை- முதுமை, தனிமை- துணை போன்ற இருமைகளின் நடுவில் நின்றும், அகந்தை அல்லது தளர்வு இன்றி தொடரும் சுயநிலையே இதன் மைய சூழலாக அமைகிறது. ஒவ்வொரு செயல்பாடும் பயத்தின் மறுப்பாகவும், விழிப்புணர்வின் உறுதியாகவும் பதிவு செய்யப்படுகிறது.
கவிதை
தலைக்கனம் மதிகெடுக்கும் என
உச்சி நிமிர ஆராய்வதில்லை,
இமைகள் விடைப்பெறும் என
விழிகள் விழித்திருக்க தயங்குவதில்லை,
சுவாசத்தின் பரிமாற்றம் அழற்சி தருமென
கண்களின் நேர்கோடு விலகுவதில்லை,
நாவின் உரசல்கள் பிளவுபடும் என
உதடுகள் பிரிந்திருக்க அஞ்சுவதில்லை,
ஒலியின் நீளம் மிகினும், குறையினும்
துருவங்கள் ஒன்றினைவதில்லை,
கரங்களின் நேர்த்தியை முதுமை பின்தள்ளும்
என விரல்கள் நடுங்குவதில்லை,
பாதங்களின் அழுத்தத்தை கைத்துணை
பகிர்ந்துகொள்ளும் என
நடை தளர்வதில்லை,
ஒரு நொடி கண்ணசர மறுபிறவி
உயிர்த்தெழும் என
இதயம் துடிப்பதை மறப்பதில்லை,
மனதின் இறுக்கம் தோள்சாய
தளர்ந்துவிடும் என
அகந்தை அலைபாய்வதில்லை...
Very nice
பதிலளிநீக்கு